புளுகும் - புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும்! முதலமைச்சர் காட்டம்!!
இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மிகவும் ஆவேசமாகப் பேசினார். 10 மாதங்களாக திமுக அரசு டங்ஸ்டன் திட்டத்தை எதிர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். ஒரு கட்டத்தில் பழனிசாமியை மிமிக்ரி செய்யும் வகையே அவரைப் போலவே ஆவேசமாகப் பதிலளித்தார் அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன். ஒன்றிய அரசு இயற்றிய சட்டத்தால் தான் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்டது. அதை தடுக்காமல் இங்கே தீர்மானம் இயற்றுவதா என்ற எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு, நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்கமாட்டேன் என்று முழங்கினார் முதலமைச்சர்.
இந்நிலையில், ஒன்றிய அரசு கொண்டு வந்த சுரங்க சீர்திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக உறுப்பினர் தம்பிதுரை பேசிய காணோலி சமூகதளத்தில் வைரலானது. இதைக்குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து இரண்டு பதிவுகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் பதிவை மறுபதிவு செய்து வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவரை கடுமையாகச் சாடியுள்ளார்.
”மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது! மதுரை டங்க்ஸ்டன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” எனத் திரு. தம்பிதுரை அவர்கள் மழுப்பி இருக்கிறார். அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது. டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் திரு. தம்பிதுரை ஆதரித்தார்.
அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது. அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது. திரு. தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை?
மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும் - புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி!
— M.K.Stalin (@mkstalin) December 9, 2024
பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது!
மதுரை #Tungsten விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன்… https://t.co/muLgijIcie
முன்னதாக சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் வீடியோவுடன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ”சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார். சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்… தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது!” என்று கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.… pic.twitter.com/V1riWfa03l
— M.K.Stalin (@mkstalin) December 9, 2024