சமத்துவத்தையும், சமநீதியையும் கற்பிப்பதுதான் கடமை.. துணைவேந்தர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!!

மாணவர்களிடையே சமத்துவத்தையும், சமநீதியையும் கற்பிப்பதுதான் உங்களுடைய தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்று பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள், பதிவாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதlலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், தலைமை செயலாளர் நா.முருகானந்தம், உயர்கல்வித்துறை செயலர் சி.சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
”இந்தியாவின் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு ஒளிவிளக்காக உயர்ந்து நிற்கிறது. தரமான கல்வியால் நாம் நாட்டை வழி நடத்தி கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பங்களில், உலகம் வேகமாக மாறி வருகிறது. இதற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் நம்முடைய பல்கலைக்கழகங்கள் செயல்படவேண்டும்.
ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான மையங்களாக உயர்கல்வியின் உலகளாவிய தலைமையகமாக தமிழக பல்கலைக் கழகங்கள் திகழவேண்டும். இதுதான் என் கனவு.
மாணவர்களிடையே சமத்துவத்தையும், சமநீதியையும் கற்பிப்பதுதான் உங்களுடைய தலையாய கடமையாக இருக்க வேண்டும். பிரிவினையைத் தூண்டும் கருத்துகளுக்கோ, நடவடிக்கைகளுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இதில் எவ்விதமான சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள இயலாது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.