சட்டப்பேரவைக்கு நாள் குறிச்சாச்சு.. வரும் 24-ம் முதல் கூட்டத்தொடர் ஆரம்பம்

 
TN Assembly

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 24-ம் தேதி கூடுவதாக பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இந்த 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் பிப்ரவரி 20-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பிப்ரவரி 22-ம் தேதி வரை நடைபெற்றது.

TN-Assembly

வழக்கமாக பட்ஜெட்டையெட்டி, துறைகள்தோறும் மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்படும். ஆனால், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்து மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்படாமல் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்றதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் நேற்று (ஜூன் 6) இரவுடன் திரும்பப் பெறப்பட்டது. தற்போது அரசின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று பேரவைத்தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.

Appavu

அப்போது பேசிய அவர், “ஜூன் 24-ம் தேதி காலை 10 மணிக்கு துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் கூட்டத்தொடர் தொடங்கும். இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்றும், எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஜூன் 24-ம் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ அல்லது 10 நாட்களுக்கு முன்போ அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்” என்றார்.
 

From around the web