தாயை நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய கொடூர மகன்.. மது குடிக்க பணம் தர மறுத்ததால் விபரீதம்!!

கன்னியாகுமரி அருகே மது குடிக்க பணம் தர மறுத்த தாயை நண்பர்களுடன் சேர்ந்து மகன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இலந்தவிளை பகுதியை சேர்ந்தவர் மேரி மார்கிரட். இவரது மகன் ஷர்லின் ஜோஸ். மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர், தாயிடம் இருக்கும் பணத்தை மிரட்டி பறித்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று தனது தாய் மேரி மார்கிரட்டிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டு உள்ளார். ஆனால் மேரி மார்கிரெட் தன்னிடம் பணம் இல்லை. நீ குடிப்பதற்கு பணம் தர முடியாது என்று கூறி மறுத்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த ஷர்லின் ஜோஸ், பணம் தராததால் தனது தாய் என்றும் பாராமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மார்கிரெட்டை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார். தாயை தாக்கிய பின்னர் ஷர்லின் ஜோஸ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து மகன் தாக்கியதில் காயமடைந்த மேரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தாயை தாக்கிய மகன் ஷர்லின் மற்றும் அவரது நண்பர்களை புகாரின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.