மஹாராஷ்ட்ரா முதல்வரே சொல்லிட்டாரே.. எங்க பணத்தைக் கொடுங்க! ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!!

மகாராஷ்ட்ராவில் மராத்தி மட்டுமே கட்டாயம் என்று முதலமைச்சர் தேவந்திர ஃபட்நாவிஸ் கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டிற்குரிய 2,152 கோடி ரூபாயை எப்போ வழங்குவீர்கள் என்றும் கேட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ், இந்தியை மூன்றாவது மொழியாக திணித்ததற்கு எதிரான கடும் எதிர்ப்பை அடுத்து, இப்போது மாநிலத்தில் மராத்தி மட்டுமே கட்டாயம் என்று கூறுகிறார். இது, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிப்பதற்கு எதிரான பரவலான கண்டனத்திற்கு அவர் அஞ்சுவதன் தெளிவான வெளிப்பாடாகும்.
மாண்புமிகு பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் பின்வருவனவற்றை தெளிவுபடுத்த வேண்டும்:
-
மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின் (#NEP) கீழ் மூன்றாவது மொழியாக மராத்தியைத் தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற ஃபட்நாவிஸின் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கிறதா?
-
அவ்வாறு இருப்பின், தேசிய கல்விக் கொள்கை மூன்றாவது மொழியை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்று கோரவில்லை என்பதை உறுதிப்படுத்தி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தெளிவான உத்தரவு வெளியிடுமா?
-
தமிழ்நாடு கட்டாய மூன்றாவது மொழி கற்பித்தலை ஏற்க வேண்டும் என்ற காரணத்தின் பேரில் மத்திய அரசு நியாயமற்ற முறையில் நிறுத்தி வைத்துள்ள ரூ. 2,152 கோடியை விடுவிக்குமா?”
என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியுள்ளார்.