புறவழிச்சாலையில் பல்டி அடித்து பறந்த கார்.. 3 மாணவிகள் உள்பட 4 பேர் பலி!

சென்னை படூர் புறவழிச்சாலையில் நடந்த கார் விபத்தில் 3 சட்டக்கல்லூரி மாணவிகள் உட்பட 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் சட்டகல்லூரியில் நேற்று மாலை 3.30 மணி அளவில் கல்லூரி முடிந்ததும் 4-ம் ஆண்டு மாணவர்கள் மகா ஸ்வேதா (21), பவித்ரா (21), கர்லின் பால் (21), 3-ம் ஆண்டு மாணவர்கள் லிங்கேஸ்வரன் (23), சிவா (23) ஆகிய 5 ஒரே காரில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கோவளத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு உணவகம் ஒன்றில் டீ குடித்துவிட்டு படூர் புறவழிச் சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தனர். காரை மாணவர் சிவா ஓட்டியுள்ளார். படூர் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தின் அருகே கார் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. நாயின் மீது மோதாமல் இருக்க சிவா காரை இடது புறமாக திருப்பி உள்ளார்.
கார் கட்டுப்பட்டை இழந்து நிலை தடுமாறி சாலையை விட்டு கீழே இறங்கி தனியார் கல்லூரி வளாகத்திற்கு கார் பறந்து சென்று விழுந்தது. இதில் காரில் இருந்த மகா ஸ்வேதா, பவித்ரா, லிங்கேஸ்வரன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த சிவா, மாணவி கர்லின் பால் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
விபத்தை அறிந்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கர்லின் பால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிந்தார். இந்நிலையில், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.