ஐந்தாவது ஆண்டு தொடக்கம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து!!

 
Stalin Thiruma

தமிழ்நாட்டின் முதலமைச்சராக 4 ஆண்டுகள் நிறைவு செய்து 5வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி தொடர முதல்வர் மு.க.ஸ்டாலினின் 4 ஆண்டு சாதனை நிச்சயம் துணை புரியும். நாளை நமதே என்பது நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது. தமிழக முதல்வரின் சாதனை பயணம் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில், 'குடிஅரசு' ஏடு சார்பில் திமுக ஆட்சியின் சாதனைகளை உலகறிய பறைசாற்றும் நோக்கத்தில், “திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் இதோ!” என்ற சிறு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நூல் பட்டிதொட்டியெல்லாம் பரவ வேண்டும். இச்சாதனை சரித்தரம், தங்கள் ஆட்சி திராவிடத்தின் மீட்சி என்பதால், இதையே, தங்களுக்கு கருத்து மாலையாக காணிக்கையாக்கி மகிழ்கிறது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

"இந்த நான்கு ஆண்டுகளில் அவர் எண்ணற்ற பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு ஓர் முன் மாதிரி அரசாக திராவிட முன்மாதிரி அரசாக வழி நடத்தி வருகிறார். இன்று அவரை நேரில் சந்தித்து இந்த நான்காண்டு சாதனைகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து, ஐந்தாம் ஆண்டிலும் அளப்பரிய சாதனைகளை ஆற்ற வேண்டும் என எமது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

From around the web