குக்கரால் அடித்து இளைஞர் படுகொலை.. ஆதரவற்ற உறவினரை வீட்டில் தங்க வைத்தவருக்கு நடந்த சோகம்!

 
Madurai

மதுரையில் கஞ்சா போதையில் உறவினரை தலையில் அடித்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் தத்தனேரி அருகே உள்ள பாக்கியநாதபுரம் ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). கூலித் தொழிலாளியான இவர், தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். கார்த்திக்கின் உறவினரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சீதாராமதாஸ் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (18) ஆதரவற்ற நிலையில் இருந்ததால் அவரை தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில், கார்த்திக்கும், செந்தில்குமாரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அருகில் இருந்த குக்கரை கொண்டு கார்த்திக்கின் தலையில் அடித்துள்ளார். தலையில் படுகாயம் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்துள்ளார்.

murder

உடனே செந்தில்குமார் அங்கிருந்து தப்பிய நிலையில் கார்த்திக் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அவரது தந்தை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்லூர் போலீசார் கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார்த்திக்கை கொலை செய்த அவரது உறவினரான செந்தில்குமார், ஏற்கெனவே தேனி மாவட்டத்தில் கொலை சம்பவம் ஒன்றில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளதும், அடிக்கடி கஞ்சா புகைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

Sellur PS

கார்த்திக்கின் தந்தை அளித்த புகாரின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்த செல்லூர் போலீசார் செந்தில்குமாரை இன்று கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web