கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி.. மதுரையில் சோகம்
![Madurai](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/44dfbe629d7187d4933750e8c5faf060.webp)
மதுரை அருகே வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக தமி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்துவருகிறது.
இந்த நிலையில் நேற்று மதுரை அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்நிலையில் மதுரை வைகையாற்றை ஒட்டியுள்ள மதிச்சியம் சப்பாணி கோவில் தெருவில் வசித்து வந்த பாலசுப்ரமணியன் என்பவர் நேற்றிரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கனமழை காரணமாக வீட்டின் மேலே இருந்த கான்கிரிட் சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் மீது சுவர் விழுந்தது சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். வீடு இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் வீட்டில் உள்ளவர்கள் மதிச்சியம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாலசுப்ரமணியனின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வரும் நிலையில் நேற்று சுவர் இடிந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.