தமிழ்நாட்டு தலைமையாசிரியரின் வாழ்த்து.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி!!

 
Anbil Mahesh

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எந்தக் குறிப்புகளையும் பார்க்காமல் அனைத்துத் தகவலகளையும் மனதிலிருந்தே நேரடியாகப் பேசி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

அன்பில் மகேஷின் உரையைப் பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ தம்பி உன் பேச்சால் நான் மட்டுமல்ல சட்டமன்றமே அசந்து போய்விட்டது” என்று வாழ்த்துச் செய்தியை கைப்பட எழுதி கொடுத்துள்ளார். முதலமைச்சரின் இத்தகைய வாழ்த்துச் செய்தியை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பெற்றுள்ள அன்பில் மகேஷ், மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அன்பில் மகேஷ், “தமிழ்நாட்டின் தலைமையாசிரியர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூன்றாவது முறையாக வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். இந்தப் பெருமைக்கு அடித்தளமிட்ட என்னுடைய திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு முதல் நன்றிகள்... ‘மகேஸூ… தம்பி… அண்ணே…’ என 9 ஆண்டுகளாக தங்களது வீட்டின் மூத்த மகனாக என்னை நேசிக்கும் என் தொகுதி மக்களுக்கு அன்பும். நன்றியும்.

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது உரையாற்றும் போதெல்லாம் எனக்கு மேலான ஆலோசனைகள் வழங்கிவரும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நட்பிற்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு ஊக்கமளித்துவரும் அவை முன்னவர் மாண்புமிகு துரைமுருகன் அவர்களுக்கும், பேரவைத் தலைவர் மாண்புமிகு அப்பாவு அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். ஆண்டுதோறும் வாழ்த்தியனுப்பும் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு  அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், அனைத்து சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஆசிரியப் பெருமக்கள், மாணவச் செல்வங்கள், துறை அலுவலர்கள், பெற்றோர்கள் என அனைவருக்காகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி உழைக்கக் காத்திருக்கிறேன். *அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்!* என்று குறிப்பிட்டுள்ளார்.


 

From around the web