ரேஷன் கடைகளில் சூப்பர் வசதி... வாங்கிய பொருட்களுக்கு செல்போன் மூலம் பணம் செலுத்தலாம்!!

 
Ration

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களுக்கு செல்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும்  ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.

QR-Code

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள M.VM.P ரேஷன் கடையில் QR code மூலம் பணம் செலுத்தும்  நடைமுறையை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்தார்.

இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 602 ரேஷன் கடைகள், 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், 7 நகர கூட்டுறவு சங்கம், 10 மருந்தகங்கள் என கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் QR code மூலமாக பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Ration-card

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளரை சந்தித்த கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம், “தமிழ்நாட்டில் 22,000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடத்தும் பணி நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 6,500 கூட்டுறவு சங்கங்களில் ஏப்ரல் 30-ம் தேதியுடன் பதவி காலம் நிறைவடைந்த பணியாளர்களின் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, கூடுதல் பதிவாளர் முருகன் உள்ளிட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

From around the web