மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை.. +2 தேர்வில் 2 பாடத்தில் தோல்வி.. உயிரை மாய்த்த மாணவன்!!

சென்னையில் தேர்வு தோல்வியால் ப்ளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். தனியார் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தேவா (17). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். அவர் நடந்து முடிந்த ப்ளஸ்-2 தேர்வை சரியாக எழுதவில்லை. இதுகுறித்து அவர் பெற்றோரிடம் கூறிவந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ப்ளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. அப்போது தேவா தமிழ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் தோல்வி அடைந்து இருந்தார். அவர் தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் குறைந்த மதிப்பெண்ணும் பெற்று இருந்ததாக தெரிகிறது. இதனால் மாணவர் தேவா மிகவும் மனவேதனை அடைந்தார்.
அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி அடுத்த தேர்வில் பரீட்சை எழுதி கொள்ளலாம் என்று தெரிவித்தனர். எனினும் தேர்வு தோல்வியால் மிகுந்த மனவேதனையில் இருந்த தேவா வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் கதறி துடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி போலீசார், மாணவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்வு தோல்வியால் ப்ளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.