சவர்மா சாப்பிட்ட மாணவி பலி.. 13 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.. நாமக்கல்லில் அதிர்ச்சி!

 
Namakkal

நாமக்கல்லில் ஹோட்டலில் சவர்மா உள்ளிட்ட அசைவ உணவுகளை சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று (செப். 16) பிறந்த நாளாகும். இதனையொட்டி அவர் தனது நண்பர்கள் 13 பேருக்கு ட்ரீட் கொடுப்பதற்காக நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் சனிக்கிழமையன்று மாலை சென்ற நிலையில், அங்கு சவர்மா உள்ளிட்ட அசைவ உணவுகளை சாப்பிட்டு உள்ளனர்.

இதேபோல், நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்த தவக்குமார், அவரது மனைவி, மகள் கலையரசி (14), மைத்துனர் என நான்கு பேர் அதே ஹோட்டலில் சமர்வா பார்சல் வாங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை திடீரென 13 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கல்லூரி விடுதி ஊழியர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Namakkal

இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா, மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் பரமத்தி சாலையில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்தார். மாணவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என உணவக உரிமையாளர் நவீன்குமாரிடம் கேட்டறிந்தார். 

மேலும் கிச்சன் அறையை பார்வையிட்ட அவர் சிக்கன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவும், உணவகத்தை சீல் வைக்கவும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து அங்கிருந்த சிக்கன்களை பினாயில் கொண்டு அழித்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் உணவகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Namakkal

இதற்கிடையே இந்த உணவகத்தில் வாங்கிச் சென்ற சவர்மாவை சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த தவக்குமாரின் மகள் கலையரசி மற்றும் அவரது அம்மா சுஜாதா, அத்தை கவிதா, மாமா பூபதி, மாமன் மகள் சுனோஜி ஆகியோருக்கும் வாந்தி மயக்கம் ஏற்படவே கலையரசி  மட்டும் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் பின்னர் இரவு வீட்டுக்கு திரும்பினார்.

இதற்கிடையில் மற்ற நால்வருக்கும் வயிற்றுப்போக்கு வாந்தி அதிகமாகவே நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இந்த நிலையில் வீட்டுக்கு திரும்பிய பள்ளி மாணவி கலையரசி வாந்தி மயக்கம் அதிகம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த மாணவியின் உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

From around the web