பொங்கல் விடுமுறைக்கு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!!

 
Train

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என தொடர் விடுமுறையால் தென் மாவட்டங்களுக்கு மக்கள் படையெடுக்க உள்ளார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார். இந்நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாம்பரம்-கன்னியாகுமரி இடையே (வண்டி எண்-06093) ஜனவரி 13-ந்தேதி 20 பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில், தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், தஞ்சாவூர், அருப்புக்கோட்டை, நெல்லை வழியாக மறுநாள் பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி-தாம்பரம் இடையே (வண்டி எண்-06094)  சிறப்பு ரெயில், கன்னியாகுமரியில் இருந்து 14-ந்தேதி  மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

சென்ட்ரல் சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே (வண்டி எண்-06089) வருகிற 12, 19-ந்தேதிகளில் 22 பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில், சென்ட்ரலில் இருந்து நள்ளிரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, கரூர், மதுரை, நெல்லை வழியாக மறுநாள் மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து (வண்டி எண்-06090) வருகிற 13, 20-ந்தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில், இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணி்க்கு சென்ட்ரல் வந்தடையும்.

நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஜனவரி.12, 19, 26 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரெயில், (06092) மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, ஜன.13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரெயில் (06091) மறுநாள் அதிகாலை 04.55 மணிக்கு நெல்லை சென்றடையும்.நெல்லையிலிருந்து சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ராமநாதபுரத்தில் இருந்து 10,12,17 ஆகிய தேதிகளில் நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரெயில், (06104) தாம்பரத்துக்கு அதிகாலை 3.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக 11,13,18 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 5.30 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். ராமநாதபுரத்திலிருந்து பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக தாம்பரம் இந்த ரயில்கள் இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் நாளை ஜனவரி 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 

From around the web