விரைவில்... கலைஞர் கருணாநிதி பல்கலைக் கழகம்! முதலமைச்சர் அறிவிப்பு!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலைச் சிறுத்தைகள் சிந்தனைச் செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் கட்சியின் ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் விதி எண் 55 படி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இவர்களுடைய கோரிக்கையை ஏற்று கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக் கழகம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
”தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும், கல்லூரிகளாக இருந்தாலும், அவையெல்லாம் இன்றைக்கு வளர்ந்து, மேலோங்கி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, ஏன், உலக அளவிலே இன்றைக்குப் பாராட்டப்படக் கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கின்றன.
நாட்டிலேயே முதல் இடத்திற்கு வந்திருக்கக்கூடிய அந்தக் கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்குக் காரணமாகப் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், அவர்களிலே முக்கியமான தலைவர்களில் ஒருவராக மறைந்த முதல்வர் கலைஞர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
விரைவில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்தில் அவரது பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
முன்னதாக செல்வப் பெருந்தகை, ஜி.கே.மணி உள்ளிட்ட தலைவர்கள் கலைஞர் கருணாநிதியின் பெயரில் ஏன் பல்கலைக்கழகங்கள் வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்கள்.