இங்கிலாந்தில் கொல்லப்பட்ட மகன்... பரிதவிக்கும் பெற்றோர்.. ஒன்றிய, மாநில அரசுக்கு கோரிக்கை!
![London](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/3b07701c27aea1ecf95527536a295730.jpg)
லண்டனில் கொலை செய்யப்பட்ட மகனின் உடலை இந்தியாவுக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மருதமலை பகுதியைச் சேர்ந்தவர் பட்டாபிராமன். ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். விக்னேஷ் லண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 14-ம் தேதி இரவு 11.50 மணிக்கு, பணி முடித்து வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்த மீது வாகனம் ஒன்று மோதியுள்ளது.
மோதியவர் வாகனத்துடன் விரைய, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட விக்னேஷ் சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிந்தார். இந்த சம்பவம் ஒரு விபத்து என முதலில் கருதப்பட்ட நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஷாஸேப் காலித் (24) என்பவரும், அவருக்கு உதவியதாக 20 முதல் 48 வயது வரையுள்ள மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சைக்கிளில் சென்று கொண்டிருந்த விக்னேஷ் மீது மோதிய காரில் இருந்த ஒருவர் அவரைத் தாக்கியதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக லண்டன் போலீசார் 8 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மகனின் உடலை இந்தியாவுக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒன்றிய - மாநில அரசுகளுக்கு தந்தை பட்டாபிராமன் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். மகன் உயிரிழந்த 10 நாட்களாகியும் உடலை காண முடியாமல் பரிதவிப்பதாக உருக்கமாக தங்கள் வேதனையை பட்டாபிராமன் பதிவு செய்து இருக்கிறார்.