சீமான் வீடு முற்றுகை! பெரியார் ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்கு!!

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தந்தை பெரியாரை இழிவு படுத்தும் வகையில் அவதூறாக பேசி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். பாஜக, ஆர்.எஸ்.எஸ் கொடுத்த வேலையை செய்கிறார் என்று பெரியாரிஸ்டுகளும் திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்களும் கண்டித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடுவோம் என மே 17 இயக்கத்தினர், தந்தை பெரியார் திக உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. நேற்று சீமான் வீட்டு முன்னால் வாகனங்களில் பெரியார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வந்து குவிந்தவாறு இருந்தனர்.
சீமானுக்கு எதிரான வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி நேற்று சீமானின் வீட்டின் முன்பு முழக்கமிட்டனர்.சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்
போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீமான் வீட்டுக்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சீமான் வீட்டு முன் குவிந்த பெரியாரிய உணர்வாளர்கள் வீட்டை முற்றுகையிடவும் முயன்றனர். காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர். சீமான் வீட்டு முன்பு போராடிய 878 பெரியார் ஆதரவாளர்கள் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.