மீண்டும் அமைச்சராகிறாரா செந்தில் பாலாஜி? எப்போது?

ஞாயிற்றுக் கிழமை கோயமுத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஹாக்கி ஸ்டேடியம் அடிக்கல் நாட்டுதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவி விழாவில் பங்கேற்ற கையோடு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜியின் ராஜினாமா உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டவுடன், அவருடைய ஜாமீனை ரத்து செய்யச் சொல்லி அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை முடித்து வைக்கப்பட்டது. வழக்கு முடியும் வரையிலும் செந்தில் பாலாஜி எந்த பதவியையும் வகிக்கக்கூடாது என்ற அமலாக்கத்துறையின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
அமலாக்கத்துறையின் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது பாஜகவில் அஜீத் பவார் உள்ளிட்டவர்கள் துணை முதலமைச்சர், அமைச்சர் என பதவிகளை வகித்து வருகிறார்கள். செந்தில் பாலாஜி வழக்கு முடிய 15 ஆண்டுகள் ஆகும் என அவர் தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
உச்சநீதிமன்றக் கருத்துக்கு மதிப்பளித்து ராஜினாமா செய்து ஜாமீன் ரத்து வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெற்ற செந்தில் பாலாஜி, உச்சநீதிமன்றத்தில் அமைச்சராகப் பதவி ஏற்பதில் சிக்கல் இல்லை என்ற தீர்ப்பைப் பெற முடியும் என நம்புகிறார். அது தொடர்பான வழக்கு விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே மீண்டும் அமைச்சர் பொறுப்பிற்கு வந்து விடுவார் என செந்தில் பாலாஜியின் ஆதரவாளார்கள் கருதுகின்றனர். முதலமைச்சரும் செந்தில் பாலாஜிக்குப் பதிலாக புதிய அமைச்சரை நியமிக்காமல் அந்த இடத்தை காலியாகவே வைத்துள்ளார்.