பாலியல் வக்கிரம் பிடித்த சீமானுக்கு பொதுவாழ்வில் இடமில்லை - ஜோதிமணி எம்.பி. ஆவேசம்!!

 
Seeman

நேற்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி காவல்துறையின் கேள்விகளுக்கு பதிலளித்தார் சீமான். முன்னதாக சேலத்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்ட சீமான், பெண்கள் படை சூழ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்தார். சுற்றி இருந்த பெண்களே முகம் சுழித்து விட்டனர்.

சீமானின் இந்தப் பேட்டிக்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளது. இந்த பேட்டிக்காகவே இவர் மீது தனியாக ஒரு வழக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது. இந்நிலையில் சீமானின் இந்தப் பேட்டியை கண்டித்து கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்,

”சீமான் பொதுவெளியில் , எல்லை கடந்து வெளிப்படையாக அறுவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுகிறார்.  இவரெல்லாம்  ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு.பாதிக்கப்பட்ட பெண்ணை அவமதிப்பது மட்டுமல்லாமல்  பெண் இனத்தையே சீமான் அவமதிக்கிறார். 

அவரைப் பொறுத்தவரை  பெண்ணை தூக்கிப்போய் பாலியல் வன்கொடுமை செய்யாமல் வேறு எவ்விதமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாலும் அது பிரச்சினையில்லை. எவ்வளவு வக்கிரமான மனநிலை! அந்தக் குற்றச்சாட்டைத் தான் விஜயலட்சுமி சீமான் மீது வைக்கிறார். ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு அவரை ஏமாற்றுவதும் சட்டப்படி கடுமையான குற்றமே என்பதை சட்டம் சீமானுக்குப் புரிய வைக்கும்.

இப்படி ஆபாசமாக பாலியல் வக்கிரத்தோடு,பெண்களை அவமதிக்கும் வகையில்,பெண்களின் பாதுகாப்பிற்கும்,கண்ணியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில்  பேசுகிற ஒருவரை ஒரு சமூகமாக நாம் கடுமையாக எதிர்க்கவேண்டும். இப்படிப்பட்ட பாலியல் வக்கிரம் பிடித்தவர்களுக்கு,பெண்களை கேவலமாக நினைப்ப்பவர்களுக்கு  பொதுவாழ்வில் எவ்வித இடமும் இருக்கக்கூடாது. 

சீமானின் இந்தப் பேச்சிற்காக காவல்துறை அவர் மீது தனியாக வழக்குப்  பதிவுசெய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் இப்படிப்பட்ட  கேவலமான பேச்சை,செயலை ஆதரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 

தமிழ் தேசியம் என்பது  பெண்களை ஆபாசமாகவும்,பாலியல் வக்கிரத்தோடும் பேசுவதல்ல. பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது. வீரத்தைப் போற்றக் கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்." என்று ஜோதிமணி எம்.பி. அறிக்கையில் கூறியுள்ளார்.

From around the web