பள்ளி மாணவன் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை.. செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் விபரீதம்!

வேலூர் அருகே செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவன், கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்து உள்ள பெரியபாலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் தாமு (14). இவர், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். வசந்தகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். சிறுவன் தாமு எந்நேரமும் செல்போனில் பிரீபயர் கேம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனை அவரது தாயார் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி இரவு செல்போனில் பிரீபயர் கேம் விளையாடிக் கொண்டிருந்த தாமுவை தாயார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மாணவன் தாமு மொட்டை மாடிக்கு சென்றுள்ளான். இரவு ஒரு மணி ஆகியும் மகன் கீழே வராததால் அதிர்ச்சி அடைந்த தாய் கீதா மாடிக்கு சென்று பார்த்தார்.
அங்கு பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தாமு இறந்து கிடந்தான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் கீதா கதறி அழுதார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் தாலுகா போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் தாமு யாரிடமும் பேசாமலும், பழகாமலும் பெரும்பாலான நேரம் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் நன்றாக படிக்கக் கூடியவராகவும் இருந்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.