லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பரிதாப பலி.. தந்தை கண்முன்னே உயிரிழந்த சோகம்!

 
Chidambaram

சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி தந்தை கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காவிரிகாட்டூர் சொக்கலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது மகள்  ஜனுஷிகா (8). இவர் வயலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். தினசரி ஜனுஷிகா அவரது தாயாருடன் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஆனால் சிறுமியின் தாயார் இன்று வேறு ஒரு பணிக்காக சென்றதால், ஜனுஷிகா, தனது தந்தை ஜம்புலிங்கத்துடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு புறப்பட்டார்.

Accident

சிலுவைபுரம் அருகே சென்ற போது புவனகிரி பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த டாரஸ் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமி, மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தந்தை ஜம்புலிங்கம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

உடனே இந்த விபத்து குறித்து சிதம்பரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் உயிரிழந்த சிறுமியின் உடல் உடற்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். காயமடைந்த ஜம்புலிங்கத்தை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 Chidambaram Taluk PS

இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். தந்தை கண்முன்னே மகள் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web