பிரபல A2B ஹோட்டல் சாம்பார் இட்லியில் புழு.. வாடிக்கையாளர் அதிர்ச்சி.. வைரல் வீடியோ!

 
A2B

திருவண்ணாமலையில் உள்ள ஓட்டலில் பரிமாறப்பட்ட சாம்பார் இட்லியில் புழு இருந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் பிரபல ஹோட்டலான அடையார் ஆனந்த பவன் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சுமார் 8 மணியளவில் ஹோட்டலுக்கு தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சச்சின் மற்றும் அவரது நண்பர் வெங்கடேஷ் இருவரும் சாப்பிட வந்தனர். அவர்கள் சாம்பார் இட்லி ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் சாப்பிட்ட சாம்பார் இட்லியில் புழு ஒன்று கிடந்து உள்ளது. இதைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அது குறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டு உள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

A2B

தகவல் அறிந்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் ஹோட்டலுக்கு விரைந்து வந்தனர். சாம்பார் இட்லி வாங்கி சாப்பிட்ட சச்சின் மற்றும் வெங்கடேஷ் இருவரிமும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு எழில்சிக்கையராஜா மற்றும் இளங்கோ ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் ஓட்டலின் சமையல் கூடம், உணவு தயாரிக்கும் இடம், காய்கறிகள் பயன்படுத்தக்கூடிய இடங்கள், குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 


இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சமூக வலைதளத்தில் பரவிய தகவலின் அடிப்படையில் ஓட்டலில் ஆய்வு செய்யப்பட்டது. குற்றம் சொல்லும் அளவில் சமையல் அறையில் எந்தவித பிரச்சினையும் இல்லை. காய்கறிகள் மூலம் சாம்பாரில் புழு வந்ததா? என்று காய்கறிகள் சிலவற்றை வெட்டி பார்த்தோம்.”

அதன்பின் ஓட்டல் ஊழியர்களிடம், “சமையல் அறையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். உணவகத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் கையுறைகளை பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு உணவை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினோம்” என்றனர்.

From around the web