சோகம்.. குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவி பலி.. 3 பேரைக் காப்பாற்றிய சிறுவன்!

திருச்சி அருகே குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள கடப்பமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் விஸ்வஜோதி (12). இவர், என்.பூலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியில் உள்ள முத்தாளம்மன் குளத்தில் குளிப்பதற்காக விஸ்வஜோதி தனது சகோதரி மகர ஜோதி மற்றும் தேவதர்ஷினி, ரவி பிரகாஷ் ஆகியோருடன் குளிக்க சென்றார்.
அனைவரும் குளத்தில் இறங்கி உற்சாகமாக விளையாடியவாறு குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது விஸ்வஜோதி, தேவதர்ஷினி, ரவி பிரகாஷ் ஆகியோர் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கினர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல்ராஜ் மகன் சபரீஸ்வரன் (13) என்ற சிறுவன் குளத்துக்குள் இறங்கிச் சென்று தேவதர்ஷினி, மகர ஜோதி, ரவி பிரகாஷ் ஆகியோரை குளத்தில் இறங்கி வெளியே இழுத்து வந்து காப்பாற்றினார்.
ஆனால் சிறுமி விஸ்வஜோதி தண்ணீரில் மூழ்கினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குளத்தில் மூழ்கிய விஸ்வஜோதியை உயிரிழந்த நிலையில் மீட்டு மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து அவரை பரிசோதனை செய்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி இறந்த சோகம் ஒரு பக்கம் இருக்க மூன்று பேரை உயிருடன் மீட்ட 8-ம் வகுப்பு மாணவன் சபரீஸ்வரனை அப்பகுதி கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது குறித்து மாணவன் சபரீஸ்வரன் கூறுகையில், விஸ்வஜோதி உள்ளிட்ட 3 பேர் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, நான் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தேன். விஸ்வஜோதி நீரில் மூழ்கிய நிலையில் ரவி பிரகாஷ் மற்றும் தேவதர்ஷினியை பிடித்து இழுத்து காப்பாற்றினேன் என்றார்.