ஆன்லைன் ரம்மியால் ரூ. 1 கோடி கடன்.. விரக்தியில் மகனை கொன்ற கொடூர தந்தை!

 
Tambaram

தாம்பரம் அருகே ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாத தந்தை தனது மகனை கொன்று தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பெண்டியாலா கிருஷ்ண சைதன்யா (33). இவர் தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் சமையல்காரராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வைதேகி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் இருந்தனர். குடும்பத்துடன் தாம்பரம் அடுத்து மாடம்பாக்கம், பார்வதி நகர் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு மாதம் 47,000 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தனது மூத்த மகன் பத்திரியை வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த, சைதன்யா, அங்கிருந்து மெரினா பீச்சுக்கு சென்று கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் திட்டத்துடன் சுற்றிய போது போலீசார் மடக்கிப்பிடித்து சேலையூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

boy-dead-body

விசாரணையில் அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைன் ரம்மியில் சூதாடும் பழக்கம் இருந்ததாகவும் அதன் காரணமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் ஏற்பட்ட நிலையில், கடன் கொடுத்தவர்கள் கடன் தொகையை கேட்டு வந்த நிலையில், சென்னையில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று தனது மனைவி மற்றும் தனது சொத்துக்களை லட்சக்கணக்கில் விற்பனை செய்து ஒரு பெரும் தொகையை திருப்பி கொடுத்துள்ளார். அவற்றை கொடுத்தும் கடனை அடைக்க இயலவில்லை என்றும் இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் பணியினை தொடர்வதற்காக சேலையூர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியனார்.

இந்நிலையில் மூத்த மகனை தனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவனை இந்த உலகத்தில் தனியாக விட்டுச் செல்ல மனமில்லாமல், வீட்டில் மனைவியும் இளைய மகனும் இல்லாத நேரத்தில், முதலில் அவனை கொன்று படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்க விட்டதாக தெரிவித்த சைதன்யா, மெரீனா சென்று தானும் உயிரை மாய்த்துக் கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு கடற்கரைக்கு செல்லும் பொழுது காவலர்களிடம் சிக்கிக் கொண்டதாக விசாரணையில் தெரிவித்தார்.

Selaiyur PS

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மகனை கொலை செய்த சைதன்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே நேரத்தில் தன் மகனை படுக்கை அறையில் தூக்கி தொங்க விட்டவர், ஏன் மெரினா பீச் வரைக்கும் நடந்து சென்றார்? வீட்டிலேயே தற்கொலை செய்யவில்லை என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web