ரூ.1,000 உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு ஜாக்பாட்.. 7.5% வட்டி தரும் மலையரசி தொடர் வைப்பு திட்டம்!

 
1000

தமிழ்நாட்டில் ரூ.1,000 உரிமைத் தொகை பெறும் குடும்ப தலைவிகளுக்காக புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

1000

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையே, இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இதுவரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையை கடந்த 10-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இது வரையிலும், 3 மாதத்திற்கான தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

1000

இந்நிலையில், ரூ.1,000 உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்காக ஊட்டியில் மலையரசி தொடர் வைப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பெறப்படும் ரூ.1,000 உரிமைத்தொகையை இந்த திட்டத்தின் கீழ் மகளிர் சேமிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 5 ஆண்டு கால சேமிப்பிற்கு 7.5% வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய தொகையை சேமிக்க விரும்பும் குடும்ப தலைவிகள் அரசு வழங்கும் உரிமைத்தொகையை மலையரசி தொடர் வைப்பு திட்டத்தின் கீழ் செலுத்தி பயன் பெறலாம் என இத்திட்டம் துவங்கப்பட்டது.

From around the web