உள்கட்சி பிரச்சனையை வெளியே வச்சுக்கீங்க... சீறிய சபாநாயகர் அப்பாவு!!
அப்பா அணி, மகன் அணி என பாமக இரண்டாக பிளவு பட்டுள்ளது. நாள் தோறும் அப்பாவும் மகனும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். மருத்துவமனையில் டாக்டர்.ராமதாஸ் அனுமதிக்கப்பட்ட போது ஐசியூவில் இருந்ததால் பார்க்கவில்லை என்று அன்புமணி கூறினார். நான் ஐசியூ வுக்கு போகல்ல என்று டாக்டர்.ராமதாஸ் பதிலடி கொடுத்தார். சட்டமன்றத்தில் பாமக கட்சி எம்.எல்.ஏ.க்களும் இரண்டு அணிகளாக பிளவு பட்டுள்ளனர்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான நேற்று கோல்ட்ரிப் மருந்து விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் டாக்ட. ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருளுக்கு பேச சபாநாயகர் அப்பாவு வாய்ப்பு வழங்கினார். அதைத் தொடர்ந்து அன்புமணி ஆதரவு எம்எல்ஏ சதாசிவமும் பேச அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் வாய்ப்பு வழங்கவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஷ் ஆகிய மூவரும் சபாநாயகரின் இருக்கை முன்பாக கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் அப்பாவு, ‘‘பாமகவின் உட்கட்சி பிரச்னைகளை சட்டமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும். பாமக எம்எல்ஏக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது’’ என எச்சரித்தார். ஆனாலும் தொடர்ச்சியாக தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்றுவேன் என்று சபாநாயகர் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
சபாநாயகரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஷ் ஆகிய மூவரும் தங்கள் இருக்கைக்குச் சென்றனர்.
