பரோட்டா சால்னாவில் கிடந்த பூரான்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

மயிலாடுதுறை அருகே பிரபல ஓட்டலில் பரோட்டாவிற்கு கொடுக்கப்பட்ட சால்னாவில் பூரான் கிடந்தது உணவு பிரியர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
உணவு என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. இன்றைய அவரசகதியிலான வாழ்க்கையில், ஹோட்டல் உணவு எண்பது மிக அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இது ஒருபுறமிருக்க மற்றொரு பக்கம் சுகாதாரமன்ற உணவு விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார் வந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு கெட்டுப்போன உணவுகளை அழித்தும் கடைகளுக்கு சீல் வைத்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் மயிலாடுதுறை ஒரு ஓட்டலில் வாங்கப்பட்ட சால்னாவில் பெரிய அளவிலான பூரான் இருந்தது உணவு பிரியர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை. இவர், பூம்புகார் அருகே உள்ள தர்மகுளம் கடைவீதியில் உள்ள ‘ஸ்டார் சி உணவகம்’ என்ற புகழ்பெற்ற உணவகத்தில் நேற்று இரவு வீட்டிற்கு பார்சல் மூலம் உணவு வாங்கி வந்துள்ளார்.
அந்த உணவை தங்களது குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று தென்பட்டுள்ளது. இதனையடுத்து அதனை எடுத்து பார்த்த போது மிகப்பெரிய சடை பூரான் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக உணவகத்திற்கு சென்று கடை ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அப்போது உரிய பதில் அளிக்கவில்லையென கூறப்படுகிறது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.