நாளை மறுநாள் முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (செப். 11) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அடுத்த மாதம் (அக். 30) பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை கருத்தில் கொண்டு நாளை மறுநாள் முதல் (செப். 9) 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. மேலும்,பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்படுகிறது. நாளை மறுநாள் நள்ளிரவு முதல் 15-ம் தேதி வரையும், அதேபோல அக்டோபர் 25 முதல் 31-ம் தேதி வரையும் தலைவர்களின் நினைவு, பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்களில் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இமானுவேல் சேகரன் நினைவு நாள் காரணமாகப் பாதுகாப்புப் பணியில் மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவரது நினைவு தினத்தையொட்டி, சிவகங்கையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக வரும் 23 ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை வாகனங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோருக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், சொந்த வாகனங்களில் வருவோர் டிஎஸ்பி அலுவலகங்களின் வாகன அனுமதிச்சீட்டு பெற்று வர வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் எதுவும் அமைத்து இருக்கக் கூடாது. வரும் வழிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.