சொகுசு காரில் கர்ப்பிணிகளுக்கு கருகலைப்பு.. பெண் உள்பட 4 பேர் கைது.. வெளியான பரபரப்பு தகவல்கள்

 
Veppur

வேப்பூர் அருகே சொகுசு காரில் கர்ப்பிணிகளுக்கு கருகலைப்பு செய்ப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (34). பி.எஸ்சி. பட்டதாரியான இவர், கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது மனைவி பெயரில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இங்கு அசகளத்தூரை சேர்ந்த சிவகுரு என்பவரின் மனைவி கௌதமி (29) ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த மருந்துக்கடையில் கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தலைமை மருத்துவர் அகிலன் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வேப்பூர் போலீசார், சம்பந்தப்பட்ட மருந்துக்கடைக்கு மருத்துவக்குழுவுடன் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

abortion

அப்போது மருந்துக்கடையில் கருக்கலைப்பு செய்ய தேவையான மருந்து, மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மருந்துக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மணிவண்ணனுக்கு சொந்தமான சொகுசு காரை சோதனை செய்தபோது, அதில் கர்ப்பிணியின் கருவில் வளரும் சிசு ஆணா? அல்லது பெண்ணா? என கண்டறியும் ஸ்கேன் கருவி இருந்தது.

இதையடுத்து போலீசார், மருந்துக்கடையில் இருந்த மணிவண்ணன், கௌதமி, தினேஷ், கண்ணதாசன் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் பல திடுக்கிடும் வெளியாகி அதிர்ச்சி அளித்தது. விசாரணையில் மனைவியின் பெயரில் மருந்துக்கடை நடத்தி வரும் மணிவண்ணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணிகளை புரோக்கர்கள் மூலம் கண்டறிந்து, அவர்களை காரில் அழைத்து வருவதுடன், ஓடும் காரில் ஸ்கேன் கருவி மூலம் கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என கண்டறிந்து மருந்துக்கடையில் வைத்து கருக்கலைப்பு செய்ததும், இதற்காக கர்ப்பிணியிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றதும் தெரியவந்தது.

Veppur

இதற்கு கௌதமி உடந்தையாக இருந்ததும், அசகளத்தூரை சேர்ந்த ராமலிங்கம் மகன் தினேஷ் (22), குமாரசாமி மகன் கண்ணதாசன் (29) ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கருக்கலைப்பு செய்ய பயன்படுத்தப்பட்ட ஸ்கேன் கருவி, சொகுசு கார் மற்றும் மருந்துக்கடையில் இருந்த கருக்கலைப்பு மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web