மக்களே உஷார்.. அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்.. கடலூரில் 6 பேருக்கு டெங்கு உறுதி!

 
Dengue

கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல இடங்களில் தொடர்ச்சியாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், நோயின் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்குரிய சிகிச்சையினை அளித்து, நோய் நீங்குவதற்கான மருத்துவத்தினை செய்யவும், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு என்ற நிலை உருவாவதை தடுக்கவும் வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Fever

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குளிர்ந்த காற்று வீசுவதுடன், பரவலாக மழையும் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் தேங்கி நிற்பதால், அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளன. மேலும் பகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்கிறது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பெரும்பாலானோர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடலூர் வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம், முட்டம், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஆறு பேர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Cuddalore GH

இவர்கள் 6 பேரும் டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்க்க டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் அரசும், சுகாதாரத்துறையும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web