தமிழ்நாட்டிற்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’... மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

 
orange-alert

நாளை கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக தென் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்களிலும் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. மேலும், இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

அதேபோல தெற்கு வங்கக் கடல் பகுதியலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் 6-ம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நாளை 16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை இருக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Rain

அதன்படி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவிர, கேரளா, மாஹே மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை கன முதல் மிக கனமழை பெய்யுமென ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு கர்நாடக கடற்கரை பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

Rain

இதனிடையே, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக் கூடும்.

From around the web