மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பரபரப்பு பேட்டி

 
RP Udayakumar

அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், அதிமுக பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர்செல்வம். தனக்குப் பதவி இல்லை என்பதால் அதிமுகவை பிரிக்க திட்டமிட்டார். கட்சியின் முக்கியத்துவம், நலன் கருதி ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைக்கப்பட்டார். அதிமுகவின் முக்கிய முடிவுகளில் மறுப்பு தெரிவிப்பார் அல்லது மௌனம் காப்பார்.

OPS

ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி பெற்றது அதிமுகவின் வெற்றி ஓபிஎஸ்-ன் வெற்றி அல்ல. இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்ட ஓபிஎஸ்சை எந்த வகையில் ஏற்க முடியும்?. அதிமுகவை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஓபிஎஸ் ஈடுபட்டார்.

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்பு ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க திட்டம் என ஊடகங்கள் எந்த ஒரு ஆதாரம் இன்றி செய்தி வெளியிடுகிறது. அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை.

RP Udayakumar

தொண்டர்களின் எண்ணத்தின் அடிப்படையில் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி வழிநடத்தி செல்கிறார். எந்த காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு சொல்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் என்னும் தனிமனிதனின் சுயலாபத்திற்காக இவ்வளவு வழக்குகள் அதிமுக மீது போடப்பட்டது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். அண்ணாமலை பேச்செல்லாம் பொய்யானது. அண்ணாமலை கர்நாடகாவில் என்ன பேசினார் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். தனது கட்சியோடு கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டையே பட்டா போட்டு தருவதாக கூறினார்கள்” என்று கூறினார்.

From around the web