தொண்டையில் ஜெல்லி மிட்டாய் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி.. தேனியில் நிகழ்ந்த சோகம்!
![Theni](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/a15e33600c7cca7dd1b1a9132d825090.jpg)
பெரியகுளம் அருகே ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டு குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஞானசேகர் (24). இவரது மனைவி மலர்நிகா (21). இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒன்றரை வயதில் ஹர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஞானசேகர் உயிரிழந்தார்.
தாயுடன் வளர்ந்து வந்த ஹர்ஷனுக்கு மலர்நிகா ஜெல்லி மிட்டாய் வாங்கி கொடுத்துள்ளார். குழந்தை அதை விழுங்கிய போது குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆட்டோவில் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஹர்ஷனை சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்.
மேலும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் குழந்தை ஹர்ஷனை பரிசோதித்தபோது குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டு ஒன்றரை வயது ஆண் குழந்தை இறந்தது குறித்து பெரியகுளம் தென்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இறந்த ஒன்றரை வயது குழந்தை ஹர்ஷனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதில் உணவுக் குழாயில் சிக்கி குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.