விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை.. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம்!!

மரக்காணம் அருகே நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி விஷ ஊசி செலுத்தித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள கரிப்பாளையம் கிராம தேரடி தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் தணிகாசலம். இவரது மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் மகேஸ்வரி (21), புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் இவர் தனது உறவினர் மகனான சந்துரு என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது, இதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகேஸ்வரி, நேற்று இரவு வீட்டிற்குள் இருந்த அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார். வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது மகேஸ்வரி மயக்க நிலையில் கிடந்துள்ளார்.
அவருக்கு அருகாமையில் விஷ ஊசி பாட்டில் ஒன்றும் கிடந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த மரக்காணம் போலீசார், மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.