மூக்குடைப்பு...ஒருத்தர் கூட ஆளுநர் அழைப்பை ஏற்கவில்லை!!

ஆளுநர் ஆர்.என்.ரவி உதகையில் இன்று ஏற்பாடு செய்திருந்த பல்கலைக் கழக துணை வேந்தர் மாநாட்டில் பங்கேற்க ஒரு துணை வேந்தர் கூட செல்லவில்லை. குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்கவிருந்த நிலையில் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் துணை வேந்தர்களும் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளனர்.
தமிழக அரசின் கீழ் இயங்கும் 21 பல்கலை.யில், 6 பல்கலைக்கழகங்களில் மட்டுமே துணைவேந்தர்கள் உள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
உச்சநீதிமன்றத் தீர்ப்பையொட்டி அமலுக்கு வந்த சட்டத்திருத்தத்தின் படி ஆளுநருக்கு பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற பொறுப்புக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு விட்டது. துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் முதலமைச்சர் வசம் வந்து விட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து தமிழ்நாடு அரசு காலியாக உள்ள துணைவேந்தர்கள் பொறுப்புக்கு நியமனம் செய்யும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த வாரம் துணைவேந்தர்கள், பதிவாளர்களை அழைத்து கூட்டம் நடத்தியிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஊட்டியில் நடைபெறும் துணை வேந்தர்கள் கூட்டம் ஜனவரி மாதமே முடிவு செய்யப்பட்டது. அரசுடன் எந்த மோதலும் இல்லை என்று ஆளுநர் தரப்பிலிருந்து அறிக்கையும் வெளியானது.
தமிழ்நாடு அரசுப் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மட்டுமல்லாமல், தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் அழைப்பை ஏற்க மறுத்து புறக்கணித்துள்ளனர். ஒரு சில தனியார் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளதாகத் தெரிகிறது.
ஆனாலும் ஒரு துணைவேந்தர் கூட பங்கேற்காததால் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குடியரசுத் துணைத்தலைவரின் வருகை நிறுத்தப்பட்டதா இல்லையா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.