சம்பூகன்களைப் படிக்க வைத்த கலைஞரால் எந்தக் கோவிலும் தீட்டுப்படாது...'பவர்' தான் ஏறும்!!

கலைஞர் சமாதியில் கோவில் கோபுரத்தை, அதாவது தமிழ்நாட்டு அரசு லோகோவை இந்து அறநிலையத்துறை வரைந்ததற்கு, "இறந்தவர்கள் சமாதியில் கோவிலை வரையலாமா? அது தீட்டு," என பாஜக கத்தியிருக்கிறது. பரவாயில்லை. அதற்கு அதுதான் பிழைப்பு. ஆனால் 'அண்ணா' திமுகவும் அதே போல கத்தி இருக்கிறது. இந்த இந்துக் கோவில்களுக்கும் கடவுள்களுக்கும் இறந்தவர்கள் என்றால் அப்படி என்ன ஒரு ஒவ்வாமை என்பதுதான் கேள்வி.
யாராவது இறந்துபோனால் இறைவனடி சேர்ந்தார், சிவலோகப்பதவி அடைந்தார், வைகுண்டப்பதவி அடைந்தார் என்றெல்லாம் நம்மாள் போஸ்டர் அடிக்கிறான். ஆனால் இறந்துபோனவர்கள் என்றால் கடவுளுக்குத் தீட்டு என்கிறான். என் நண்பன் ஒருவனின் அப்பா அவர்கள் ஊர் கோவில் திருவிழாவிற்கு காப்பு கட்டியதற்குப் பிறகு இறந்துபோய்விட்டார். உடலை, 'தீட்டு' என்ற காரணத்திற்காக ஊருக்குள்ளேயே விடவில்லை. அந்த ஊரிலேயே பிறந்து, வாழ்ந்து இறந்த ஒரு மனிதனை பக்கத்து ஊரில் எரித்தார்கள். ஆனால் பாருங்கள், திருவிழா நேர நடுராத்திரியில் திண்டுக்கல் ரீட்டா வகையறா டான்ஸ் எல்லாம் கொடிகட்டிப் பறக்கும். இதான் தீட்டின் லட்சணம்.
இத்தனைக்கும் தமிழர்களுக்கு முன்னோர் வழிபாடு உண்டு. இறந்துபோன தாத்தா பாட்டி எல்லாம் சாமிகள்தான். இன்னொருபக்கம், இறந்தவர்களின் உடலை சர்ச்சுக்குள் வைத்து பிராத்திக்கிறார்கள். பாதிரியார் பிரே செய்கிறார். சர்சுக்கோ, ஜீசஸுக்கோ தீட்டெல்லாம் ஏற்படுவதில்லை. தன்னால் படைக்கப்பட்ட ஒரு உயிரினத்தின் உயிரற்ற உடலால் கடவுளுக்குத் தீட்டுப்படும் என்றால் கடவுள் பவர்ஃபுல்லா, உயிறற்ற டெட்பாடி பவர்ஃபுல்லா என்ற கேள்வியை இயேசுவைப் பார்த்து கேட்க முடியவில்லை.
ஆனால், நம் இந்துக் கடவுள்களையும் கோவில்களையும் பார்த்து தாராளமாகக் கேட்கலாம். அதிலும் அண்ணா பெயரை வைத்துக்கொண்டு "தீட்டு" என்றெல்லாம் ஒரு கட்சி பேசுகிறதே அதைப் பார்த்து நாக்கைப் பிடுங்கும் வகையில் கேள்விகள் கேட்கலாம். எப்போதுமே காலம் காலமாக கடவுளின் பெயரால்தான் உயிரோடிருக்கும் மனிதனுக்கு, பீரியட்ஸில் இருக்கும் பெண்களுக்கு, உயிரிழந்த மனிதனுக்குக் கூட தீட்டும், தீண்டாமையும் வந்துள்ளதே தவிர அவர்களால் கடவுள் ஒருநாளும் தீட்டுப்பட்டதாக, தீமைக்குள்ளானதாக எந்த ஆதாரமும் இல்லை.
ராமர் கூட அவர்களைப் பொறுத்தவரை ஒரு காலத்தில் பிறந்து, வாழ்ந்து, இறந்து போனவர்தான். அவருக்கு எதுக்கு கோவில்? ராமர் கோவில், இறந்துபோன ராமரால் தீட்டுப்படாதா? ஆனால் பாருங்கள், உயிரோடிருக்கும் ஜனாதிபதி வந்தால்தான் தீட்டுப்படுமாம். அதுதான் 'இந்துத்துவ' லாஜிக்.
தவம் இருந்ததற்காக சம்பூகனைக் கொன்ற ராமனின் கோவிலே ராமரால் தீட்டுப்படாது என்றால், பல கோடி சம்பூகன்களைப் படிக்க வைத்த கலைஞரால் எந்தக் கோவிலும் தீட்டுப்படாது. இன்னும் சொல்லபோனால் 'பவர்' தான் ஏறும். துள்ளாத மனமும் துள்ளும் படக் காமடி போல, அவர் சமாதி மேல் வரையப்பட்ட கோபுரத்தைக் காட்டி, 'தொட்டுக்கும்புறா கயித" என நாம் அதிமுக, பாஜககாரர்களிடம் தாரளமாகச் சொல்லலாம்.
-டான் அசோக்