ஆட்டோ டிரைவரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்.. சென்னையில் பயங்கரம்!
![Chennai](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/be644f43a39fb0aa281889f32b95dc08.webp)
குன்றத்தூரில் வீட்டின் அருகே இருந்த வாலிபரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கம்பர் தெருவை சேர்ந்தவர் நிஷாந்த் (23). இவர், அதே பகுதியில் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்றிரவு சவாரி முடிந்ததும் வீட்டின் அருகே செல்போன் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் நிஷாந்த்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்ற நிஷாந்த்தை ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. சம்பவ இடத்திலேயே நிஷாந்த் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்றத்தூர் போலீசார், நிஷாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு, நிஷாந்த்துக்கு அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் வெளியே வந்த அஜித் தரப்பினர், நிஷாந்தை பழி வாங்க நோட்டமிட்டனர்.
நேற்றிரவு தனியாக வீட்டின் அருகே பைக்கில் அமர்ந்து கொண்டு செல்போனில் விளையாடி கொண்டு இருப்பதாக அஜித் தரப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே 5 பேர் கும்பல் விரைந்து சென்று, நிஷாந்த்தை வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் 5 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகக்கூடும் என்பதால், செங்கல்பட்டு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய நீதிமன்றங்களில் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் கைதானதற்கு பிறகே உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.