இன்னும் கட்சிகள் வருகிறது.. அடுத்தது நம்ம ஆட்சி தான்.. எடப்பாடி பழனிசாமி உற்சாகம்!!

 
EPS

அதிமுக - பாஜக கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வர உள்ளதாகவும், அதிமுக தலைமையிலான அணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

பூத் கிளை நிர்வாகிகள் நியமனம் குறித்து மாவட்ட பொறுப்பாளர்களிடம் பழனிசாமி கேட்டறிந்தார். இதில் சில பொறுப்பாளர்கள் இன்னும் 100 சதவீதம் பூத் கிளை நிர்வாகிகளை நியமிக்கவில்லை என்றனர். அதை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். 

”வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. இது நல்ல தொடக்கம். தேர்தல் நெருங்க நெருங்க மேலும் பல கட்சிகள் இந்த கூட்டணியில் இணையும். திமுக அரசு மீதான மக்களின் அதிருப்தியும், அதிமுக தலைமையிலான வலுவான கூட்டணியும், அதிமுக ஆட்சியை பிடிக்க உதவும்.

அப்போது அதிமுக ஆட்சிதான் அமையும். எனவே நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை விரைந்து முடித்து, தேர்தலுக்கு தயாராக வேண்டும். கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தால், என்னிடம் தெரிவியுங்கள். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை தவிர்க்க வேண்டும.” என்று எடப்பாடி பழனிசாமி மாவட்டப் பொறுப்பாளர்களிடம் பேசியுள்ளார்.

இக்கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், செம்மலை, பா.வளர்மதி, வைகைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

From around the web