அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. காரணம் என்ன..?
![Duraimurugan](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/fd13a951d7aed6188f3739b0d3cdadb4.jpg)
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் பொதுச் செயலாளரான துரைமுருகன், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சளி தொல்லையால் துரைமுருகன் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று இரவு சளி தொந்தரவு அதிகமானதை அடுத்து துரைமுருகன் வீட்டில் இருந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சளித்தொல்லைக்கு ஆண்டிபயாடிக் சிகிச்சை எடுத்துவிட்டு இன்று மாலை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.