கல்லூரி மாணவன் கழுத்தை அறுத்த எம்.பி.ஏ மாணவர்.. கல்லூரி வாகனத்தில் பயங்கரம்!!

 
Karur

கரூரில் தனியார் கல்லூரி வாகனத்தில் பொறியியல் படித்து வரும் மாணவரின் கழுத்தை எம்.பி.ஏ மாணவர் ஒருவர் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முசிறி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் நிதிஷ்குமார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல இன்று காலையில் அவர் கல்லூரி வாகனத்தில் ஏறி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார்.

Murder

அப்போது அதே கல்லூரியில் எம்.பி.ஏ படிக்கும் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த மாணவர் அண்ணாமலை, தனது பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிதிஷ்குமாரின் கழுத்தை அறுத்துள்ளார். மாணவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட வேன் ஓட்டுநர், வாகனத்தை உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று, நிதிஷ்குமாரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த குளித்தலை போலீசார், கழுத்தை அறுத்த எம்.பி.ஏ மாணவர் அண்ணாமலையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நிதிஷ்குமார் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Kulithalai PS

முதற்கட்ட விசாரணையில், நிதிஷ்குமாருடன் அண்ணாமலை நெருங்கி பழகி வந்துள்ளார். இருவரும் கல்லூரி வாகனத்தில் ஒன்றாக அமர்ந்து சென்று வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக அண்ணாமலையுடன் பேசுவதை நிதிஷ்குமார் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் இன்று வழக்கம்போல நிதிஷ்குமார் தன்னுடன் அமராமல் வேறு இருக்கையில் அமர்ந்து வந்ததால் கோபமடைந்த அண்ணாமலை, கத்தியால் நிதிஷ்குமாரை தாக்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web