மாரத்தான் போட்டிகள் ! சென்னையில் போக்குவரத்து மாற்றம்!!

 
Chennai Marathon

நாளை ஞாயிற்றுக் கிழமை சென்னையில் 13வது மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது, பிரெஷ் ஒர்க்ஸ் இன்க், தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து இந்த 13-வது சீசனை வருகின்ற 5-ம் தேதி நடத்துகிறார்கள். 25,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்பெக்ட் 20 மைலர் - (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என நான்கு பிரிவுகளில்  போட்டிகள் நடைபெற உள்ளன. முழு மாரத்தான் போட்டியானது, நேப்பியர் பாலத்திலிருந்து தொடங்கி, மெரினா கடற்கரை பாதை வழியாக கலங்கரை விளக்கத்தை சென்றடையும். அதன்பிறகு மத்திய கைலாஷ், டைடல் பார்க் ஆகியவற்றைக் கடந்து கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி செல்லும்.

சென்னையில் மாரத்தான் போட்டி நடப்பதையொட்டி முக்கிய சாலைகளில் நாளை மறுநாள் (5-ம் தேதி) அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து காந்தி சிலை வரை வாகனங்களுக்கு அனுமதி இல்லை. போர் நினைவிடத்தில் இருந்து திருவிக பாலம் வரையிலும் அனுமதி இல்லை.

ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் திருப்பி விடப்படும். எல்.பி. சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்களுக்கு பெசன்ட் அவென்யூ சாலையில் அனுமதி இல்லை. காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் ராஜீவ்காந்தி சாலை செல்ல மற்றும் பெசன்ட் நகர் 7ஆவது அவென்யூவில் வரும் வாகனங்கள் எலியாட்ஸ் பீச் செல்ல அனுமதியில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

From around the web