நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த நபர் பலி.. வழக்கு விசாரணைக்கு வந்தபோது நிகழ்ந்த சோகம்!

 
Srivilliputhur

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று தீக்குளித்த நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு எம்.கே.டி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (45). இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று ஒரு வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

Fire

நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த அவர், திடீரென தான் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது உடலில் தீப்பற்றியது. இதைக் கண்டு நீதிமன்ற வளாகத்தில் நின்று இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் சந்திரசேகர் உடலில் பற்றிய தீயை அணைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சந்திரசேகர், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Srivilliputhur Town PS

அவர் எதற்காக தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார் என்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார், விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web