ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம்.. தாய் - மகன் விஷம் குடித்து தற்கொலை!! மதுரையில் சோகம்

 
Madurai

பங்கு சந்தை முதலீட்டில் கடும் இழப்பு ஏற்பட்டு கடனால் பாதிக்கப்பட்டவர் தனது தாயுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கோச்சடை அருகே உள்ள நடராஜ் நகரில் வசித்து வந்தவர் விஜயலட்சுமி (72). இவரது மகன் உமாசங்கர் (46). இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அனிதா அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடந்து வந்தது.

இந்த நிலையில் உமாசங்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை கவனித்து கொள்வதற்காக தேனியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று தேனியில் உறவினர் வீட்டின் திருமணத்திற்காக 2-வது மனைவியுடன் சென்றார். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை அவர் மட்டும் வீட்டிற்கு வந்து விட்டார்.

poison

நேற்று காலை 2-வது மனைவி வீட்டிற்கு வந்தபோது கதவு திறக்கவில்லை. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது விஜயலட்சுமியும், அவரது மகன் உமாசங்கரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உடனே கரிமேடு போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது 2-வது மனைவியிடம் விசாரணை நடத்தினர். அதில் பங்குச்சந்தையில் செய்த முதலீடு எல்லாம் நஷ்டம் அடைந்து விட்டது. எனவே கடன் வாங்கி உள்ளார். அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

Karimedu PS

இதற்கிடையில் போலீசார் வீட்டில் சோதனை செய்த போது உமாசங்கர் எழுதியதாக கடிதம் ஒன்று சிக்கியது. அதில், “எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. எனது விவகாரத்து வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வந்து விட்டது. அதில் முதல் மனைவிக்கு விவாகரத்து கிடைத்து விட்டது. எனவே நீதிமன்றத்தில் தெரிவித்த படி முதல் மனைவி கொண்டு வந்த சீர்வரிசை பொருட்களை எல்லாம் அவரது வீட்டில் கொடுத்து விடுங்கள். எங்களது இறுதி சடங்கை மாமா நீங்கள் எளிமையாக நடத்தி விடுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

From around the web