வரும் 30-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Leave

 தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 30-ம் தேதி உள்ளூர்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் ஆராதனை விழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 177-வது ஆராதனை விழா வருகிற 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தேசூர் செல்வரத்தினம் குழவினரின் மங்கள இசையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து மாலை  6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

விழாவுக்கு தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமை தாங்குகிறார். சபா செயலாளர் அரித்துவார மங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்று பேசுகிறார். இசை விழாவை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசுகிறார். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். முடிவில் சபா செயலாளர் ஸ்ரீ முஷ்ணம் ராஜாராவ் நன்றி கூறுகிறார். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

thyagaraja

இரண்டாம் நாள் நிகழ்ச்சி 27-ம் தேதி காலை 9 மணிக்கு திருவையாறு இசைக்கல்லூரி மாணவர்களின் நாதஸ்வர இசையுடன் தொடங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு ராஜேஷ் வைத்திய வீண நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு தேசிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மூன்றாம் நாள் 28-ம் தேதி காலை 9 மணிக்கு காலை நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. இரவு 9.40 மணிக்கு திரைப்பட பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பாடுகிறார்.

நான்காம் நாள் 29-ம் தேதி மாலை 6.40 மணிக்கு திருப்பாம்புரம் சகோதரர்கள் மீனாட்சிசுந்தரம், சேஷகோபாலன் ஆகியோர் நாதஸ்வர நிகழ்ச்சி நடக்கிறது. இரவு திரைப்பட பின்னணி பாடகி மகதி, சுதா ரகுநாதன், காயத்திரி கிரிஷ் ஆகியோர் பாடுகிறார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் நாள் 30-ம் தேதி காலை 8.30 மணிக்கு மங்கள இசை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள்.

Local-holiday

இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லகில் தியாகராஜர் வீதி உலா காட்சி நடைபெறுகிறது. இரவு 8.20 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் பாடுகிறார். இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. மேலும், விழா ஏற்பாடுகளை சபா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இசை விழா தினந் தோறும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது.

இந்த நிலையில், தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஜனவரி 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்‌.

From around the web