குற்றவாளிகள் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

 
High-Court

கொலை வழக்குகளில் சரண் அடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஆராமுதன். இவர் மீது மர்ம கும்பல் நாட்டு வெடி குண்டு வீசி சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் காஞ்சிபுரம், திருப்பூரைச் சேர்ந்த 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் சரணடைய வேண்டும். வேறொரு நீதிமன்றத்தில் சரணடைய முடியாது.

murder

மேலும், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்ததை ஏற்றிருக்க கூடாது. இது போன்ற நடைமுறையை ஊக்குவித்திருக்க கூடாது. இதுபோல் சரணடைவதால் வழக்கு விசாரணை பாதிக்கும். உண்மையான குற்றவாளிகள் சரணடையாமல் போலியான நபர்களை சரணடைய வைப்பார்கள். எனவே, சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சரணடைந்ததை ஏற்றுக்கொண்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அது தொடர்பான மனுவையும் தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னாவின் முறையீட்டை ஏற்று கொண்டு, கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என்று அறிவித்தார்.

Judgement

மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில், “தேடப்படும் குற்றவாளிகள் கொலை சம்பவம் நடந்த, எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் தான் சரணடைய வேண்டும், சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்படாத மாஜிஸ்திரேட் முன்பு தாக்கல் செய்யப்படும் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஒருவேளை சரணடைந்தால் குறிப்பிட்ட மாஜிஸ்திரேட் தனது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் அளித்து சரணடையும் நபரை காவலில் எடுக்க உத்தரவிடலாம். இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.

From around the web