‘ஒரே நாடு ஒரே வரி’ முழக்கங்களை எழுப்புவது எளிது.. செயல்படுவது கடினம்.. அமைச்சர் பிடிஆர் விமர்சனம்!!

 
PTR

‘ஒரே நாடு ஒரே வரி’ என்பது போன்ற முழக்கங்களை எழுப்புவது எளிது ஆனால் செயல்படுத்துவது கடினம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் 48-வது கூட்டம் நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி பற்றி விவாதிக்கப்படும் என பட்டியல் இடப்பட்டிருந்தன. போதிய நேரம் இல்லாததால் அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 49-வது கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில், டெல்லியில் இன்று நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

GST Council

அப்போது அவர் கூறியதாவது, இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதுகுறித்து துணைக்குழுவின் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. தேசிய அளவில் மட்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று 13 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

‘ஒரே நாடு ஒரே வரி’ என்பது போன்ற முழக்கங்களை எழுப்புவது எளிது. ஆனால் செயல்படுத்துவது கடினம். ‘ஒரே நாடு ஒரே வரி’ என்பது அரசியலுக்கு பொருந்துமே தவிர செயல்பாட்டிற்கு சரிவராது. கூட்டாட்சி தத்துவத்தில் அனைத்து மாநிலங்களுடைய உரிமைகள் காப்பாற்றப்படுவதுதான் உண்மையிலேயே ‘ஒரே நாடு ஒரே வரி’.

PTR

ஜிஎஸ்டி கூட்டாட்சி தத்துவத்தில் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள். நிஜமாகவே கூட்டாட்சி தத்துவத்தில் நடைபெறுகின்ற கூட்டமோ, கவுன்சிலோ இருந்தால் இழப்பீடு தொகை குறித்த விவாதமும் இந்த கவுன்சிலில் தான் நடைபெற வேண்டும். தனிப்பட்ட முறையில் நிதியமைச்சரோ, ஒன்றிய அரசோ முடிவெடுத்து, உண்டு, இல்லை என்று சொல்வது நியாயமில்லை” என்று கூறினார்.

From around the web