வார விடுப்பு தர மறுத்த ஆய்வாளர்... உளுந்தூர் பேட்டை அருகே கார் விபத்தில் மனைவியுடன் காவலர் பலியான சோகம்!

 
Karur

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் சிக்கி காவலர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வரவனை கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (33). இவர், சங்கர் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் குன்றத்தூர் மணிகண்டன் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் பாலமுருகன் தனது மனைவி வினோதினி (32) உடன் கரூரில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்றார்.

நிகழ்ச்சியை பாதியில் முடித்துக் கொண்டு மீண்டும் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.. உளுந்தூர்பேட்டை பாலி கிராமம் அருகே வரும் போது திடீரென டயர் வெடித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி பின்னர் எதிரே வந்த மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காவலர் பாலமுருகன் அவரது மனைவி வினோதினி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Accident

மேலும் மற்றொரு காரில் பயணம் செய்த 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்‌‌. இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே காவலர் பாலமுருகனுக்கு வார விடுப்பு வழங்காததால் அவசர அவசரமாக வேலைக்கு வந்த போது சாலை விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சங்கர் நகர் காவல் ஆய்வாளர் சரவணன் அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் எவருக்கும் முறையாக விடுப்பு வழங்குவதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலமுருகன் ஏற்கெனவே உறவினர் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமென்றும் வாராந்திர விடுமுறை உள்ளது, அதனை உறுதிப்படுத்துமாறு ஆய்வாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு ஆய்வாளர் சரவணன் விடுப்பு தர முடியாது, உடனடியாக பணிக்கு வர வேண்டும் என்று கூறி டியூட்டி லிஸ்ட்டை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட பாலமுருகன் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே அவசர அவசரமாக தனது மனைவி வினோதினியை அழைத்துக் கொண்டு காரில் சென்னைக்கு புறப்பட்டு வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

Ulundurpet PS

பாலமுருகன் விபத்தில் உயிரிழந்த தகவல் தெரிந்த உடன் சங்கர் நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வாட்ஸப் குழுவில் இருந்த டியூட்டி லிஸ்ட்டை டெலிட் செய்து விட்டு பாலமுருகனுக்கு வாராந்திர விடுமுறை கொடுத்ததாக டூட்டி லிஸ்ட்டை மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி காவல் நிலையத்தில் பாலமுருகன் படத்தை வைத்து சக காவலர்கள் அஞ்சலி செலுத்தும் பணியினை மேற்கொண்ட போது, ஆய்வாளர் சரவணன் இங்கு இதெல்லாம் செய்ய கூடாது வெளியே உள்ள போலீஸ் பூத்தில் வைத்து கொள்ளுமாறு தெரிவித்ததை அடுத்து அவரது உருவ படத்தை பூத்தில் வைத்து சக காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

From around the web