கழிவுநீர் தொட்டியில் பச்சிளம் குழந்தை.. கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? போலீசார் விசாரணை!

வந்தவாசியில் அரசு மருத்துவமனை பின்புறம் கழிவுநீர் தொட்டி மீது குழந்தையை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் பின்புறத்தில் கழிவுநீர் தொட்டி உள்ளது. இன்று காலை மருத்துவமனையின் உதவியாளர் இளையராஜா என்பவர் தண்ணீர் சுவிட்ச் போடுவதற்காக மாடிக்கு சென்றார். அப்போது கீழே மூடப்பட்டுள்ள கழிவு நீர் தொட்டியின் மீது ஏதோ அசைவது போன்று தெரிந்துள்ளது.
இதையடுத்து மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்தார். அப்போது மூடப்பட்டுள்ள கழிவு நீர் தொட்டியின் மீது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் பச்சிளம் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் தலை குப்புற படுக்க வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிருடன் இருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனை நர்ஸ்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர்கள் குழந்தை மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மருத்துவர்கள் விரைந்து வந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மருத்துவமனையில் குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்ச தாய் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.