இந்த நம்பரில் இருந்து வாட்ஸ் அப்க்கு போன் வந்தா எடுக்கவே எடுக்காதீங்க.. சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை!!

 
Whatsapp

வாட்ஸ்அப்பில் +84, +62, +63, +212, +917 என்ற எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வெளிநாட்டு வாட்ஸ்அப் கால் மோசடி நடைபெறுவதாக பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக +84, +62, +63, +212, +917 ஆகிய எண்ணில் தொடங்கிய மலேசியா, கென்யா, எத்தியோபியா, வியட்நாம் போன்ற நாடுகளின் எண்களில் இருந்து பல்வேறு அழைப்புகள் வாட்ஸ்அப் மூலமாக வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுபோன்ற தெரியாத வாட்ஸ்அப் எண்ணில் இருந்து வரும் வெளிநாட்டு கால்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என தொடர்ந்து சமூக வலைதளத்தில் பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

இது தமிழ்நாடு சைபர் க்ரைம் பிரிவு போலீசாரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, லிங்கிடு இன், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கத்தின் மூலமாக நட்பாக பழகி வெளிநாட்டிலிருந்து பேசுவது போல் வாட்ஸ்அப் கால் மூலமாக மோசடி செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Whatsapp

குறிப்பாக, முதலில் நட்பாகப் பேசி பரிசு பொருள் அளிப்பதாக தெரிவித்து, பின்பு விலை மதிப்பு அதிகம் உள்ள பொருள் அனுப்பப்படுவதாகவும், அந்த விலை மதிப்பு அதிகம் உள்ள பொருள் விமானம் மூலம் வந்தடைந்ததாக கூறி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகள் போல் பேசி, சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான வரி செலுத்த வேண்டும் எனக்கூறி மோசடி செய்வதாகவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறாக 110 புகார்கள் இந்த ஆண்டு மட்டும் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு லோன் செயலிகள் மூலமாக கடன் பெற்றவர்கள் அந்தச் செயலியை பதிவிறக்கம் செய்யும்பொழுது செல்போனில் உள்ள டேட்டாக்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை பொதுமக்கள் தந்து விடுவதால் அதை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக லோன் செயலியின் மூலம் கடன் பெற்றவர்கள் செல்போனில் வைத்திருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன் எண்களை திருடி ஆபாசமாகவும் மிரட்டும் வகையிலும் பேசி பணத்தைப் பறிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Cyber Security

இதுதவிர உறவினர்களை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப் மூலமாக புகைப்படங்களை அனுப்பி தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் இதுபோன்ற சைபர் க்ரைம் கும்பல்கள் வெளிநாட்டில் இருந்து அழைப்பது போல், வெளிநாட்டு எண்களில் வாட்ஸ் அப் மூலமாக கடன் வாங்கியவர்களை தொடர்பு கொண்டு மிரட்ட பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு எண்களில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு நூதன மோசடி இவ்வாறாக கடன் செயலிகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு எண்ணில் இருந்து வரும் மிரட்டல் கால்கள் தொடர்பாக 1600 புகார்கள் இந்த வருடம் வந்திருப்பதாகவும் சைபர் க்ரைம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தெரியாத வெளிநாட்டு எண்ணில் இருந்து வரும் வாட்ஸ்அப் கால்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் ஆகியவற்றில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் சைபர் க்ரைம் பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

அவ்வாறு கிளிக் செய்யும் போது செல்போனில் உள்ள டேட்டாக்கள் மற்றும் வங்கி கணக்கு தொடர்பான டேட்டாக்களை திருடி பணம் மோசடி செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வாட்ஸ்அப் கால் மூலமாக மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி சைபர் க்ரைம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இப்படி பேசும் நபர்கள் யாரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இல்லை எனவும், இவர்கள் இந்தியர்கள் எனவும் சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் (VPN) நெட்வொர்க்கை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இது போன்ற அழைப்புகள், மெசேஜ்களை தவிக்கும்படி போலீசார் தெரிவித்துள்ளனர்.

From around the web