பேய் அரசாண்டால்... விஜய் யை ஒழிச்சி கட்டாமல் ஆதவ் அர்ஜுனா ஓய மாட்டார் போல!!
கரூர் பெருந்துயரச் சம்பவத்திற்குப் பிறகு மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில், விஜய் உடன் இருப்பவர்களே அவருக்கு நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கி வருகிறார்கள் என்றே தெரிகிறது.
சம்பவ இடத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் மட்டும் இருந்திருந்தால் கூட அரசுடன் இணைந்து நிலைமையைக் கையாண்டிருக்க முடியும். முதலமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை வைத்திருக்கலாம். ஒரு வேளை விஜய் திருச்சியிலே தங்கியிருந்து முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசு உடனடியாக நிவாரணப் பணிகளை செய்யுங்கள் என்று கேட்டிருந்தால், முதலமைச்சர் விஜய் யையும் அழைத்துக் கொண்டே மருத்துவமனைக்கு வந்திருப்பார். தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய அத்தியாயமும் தொடங்கியிருக்கும்.
நடந்தது என்னவென்று தெரியாமலேயே வீடு போய் சேர்ந்துள்ளார் விஜய் என்றே தோன்றுகிறது. அடுத்தக் கட்டத் தலைவர்களாவது கரூரிலேயே தங்கியிருந்து முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருக்கலாம். ஆனால் சதி என்று அரசு மீது குற்றம் சாட்டி சின்னப்புள்ளத்தனமா நடந்து கொண்டிருக்கிறார்கள். எங்கே தம்மை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சமே இந்த நால்வரிடம் இருந்ததாகத் தெரிகிறது.
ஆதவ் அர்ஜூனா ஒரு படி மேலே சென்று அரசு மீது குற்றம் சுமத்தி வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் தவறு இல்லை என்று நிருபிக்கப் படும் போது அது விஜய் க்கு தான் பெரும் பின்னடைவாக மாறும். மேலும் பிரச்சனையை பெரிதாக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டு அதை சில நிமிடங்களில் நீக்கியுள்ளார் ஆதவ் அர்ஜுனா.
”சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.இளைஞர்களும், Genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்” என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டிருந்தார் ஆதவ் அர்ஜுனா.
அரசு வழக்கு பதிவு செய்து கைது செய்யலாம் என்ற பயத்திலோ என்னவோ உடனடியாக நீக்கியுள்ளார். ஆனாலும் ஆதவ் அர்ஜுனா மீது இந்த பதிவுக்காக வழக்கு தொடரப்படும் என்று தெரிகிறது.
